தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது… கவர்னர் ரோசய்யா உரை

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கும் என சட்டசபை செயலாளர் அறிவித்திருந்தார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும். கவர்னர் ரோசய்யா கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
கவர்னர் உரையில் அரசின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அதைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யும். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என தெரிகிறது.
சமாளிக்க தயார்
மின்வெட்டு, காவிரி பிரச்னை, டெல்டா மாவட்டங்களில் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவற்றை சமாளிக்க ஆளும்கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.
தேமுதிக எம்எல்ஏக்கள் 10 பேர் மீது ஏற்கனவே உரிமை மீறல் பிரச்னை உள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு பேரவை செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர்களும் நேரில் செயலாளரை சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்த 10 பேர் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து சபையில் சபாநாயகர் அறிவிப்பார் என்று தெரிகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதம்
2 நாள் விடுமுறைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும். நான்கு நாட்களுக்கு விவாதம் நடக்கும் என தெரிகிறது. விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுவார். இதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்படும். இதையடுத்து பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜயகாந்த் வருவாரா?
சட்டசபை கூடுவதையொட்டி கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 29-ம் தேதி சட்டசபை யின் குளிர்கால கூட்டம் தொடங்கியது. அப்போது, ஒரு நாள் மட்டும் பேரவைக்கு வந்த விஜயகாந்த், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்றார். அந்த கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அதன் பிறகு நவம்பர் 30-ம் தேதி நடந்த சட்டசபை வைரவிழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications