சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 144 பவுன் நகை திருடிய மாஜி எஸ்.ஐ. மனைவி
சென்னை: சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 144 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடிய வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை அண்ணாநகர் எல். பிளாக் 26வது தெருவில் வசிப்பவர் விஜயராமன். தொழில் அதிபர். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுடன் கட்டிட கான்டிராக்டராகவும் உள்ளார். அவரது மனைவி மலர். கம்ப்யூட்டர் என்ஜினியர்.
அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பவர் அண்ணாநகர் சத்யம் காலனியைச் சேர்ந்த ஜமுனா. விஜயராமனும், மலரும் வேலைக்கு செல்லும்போது ஜமுனா தான் வீட்டைப் பார்த்துக்கொள்வார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு அணிந்து செல்வதற்காக நகைகளை எடுக்க மலர் பீரோவைத் திறந்துள்ளார். அப்போது பீரோவில் உள்ள நகைகளில் பலவற்றைக் காணவில்லை. அவர் இது குறித்து ஜமுனாவிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அண்ணாநகர் போலீசில் இது குறித்து புகார் செய்யப்பட்டது. போலீசார் ஜமுனாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். போலீசார் அவரைத் துருவித் துருவி கேள்வி கேட்டபோது விஜயராமனின் வீட்டில் இருந்து 144 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடியதாக ஒப்புக் கொண்டார்.
திருடப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜமுனா முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் துளசி என்பவரின் மனைவி என்பது தெரிய வந்துள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஓய்வு பெற்ற துளசி இறந்துவிட்டார்.