பொதிகை மலையில் அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை கண்டுபிடிப்பு
குற்றாலம்: பொதிகை மலையில் அகத்திய மாமுனிவர் வழிபட்ட பால விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை வரலாறு, சமயம், மருத்துவம், இயற்கை போன்ற பல்வேறு களங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் தொன்மையும், பெருமையும் கொண்ட மலைகளாக பொதிகை மலையும், திரிகூட மலையும் விளங்குகிறது.
ஆன்மிகம் சார்ந்த ஸ்தலங்களை கொண்டுள்ள இம்மலைகளில் சைவம், வைணவம் சார்ந்த வழிபாட்டு ஸ்தலங்கள் மட்டும் அல்லாமல் சித்தர்கள் சமாதியான இடங்களும் காணப்படுகிறது.
சித்தர்கள் சமாதியான பின்பும் உயிருடன் வாழ்கின்றனர் என்பது சித்தர் வழிபாட்டினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தலைமைச் சித்தர் அகத்தியர்
ஒன்பதின் கீழ் சித்தர், பதினென்கீழ் சித்தர் என இருவகையாக சித்தர்களை பிரித்து கூறினாலும் அனைத்து சித்தர்களுக்கும் தலைமையானவராய் திகழ்பவர் அகத்தியரே ஆவார்.
வாய் மொழி செய்திகள்
அகத்தியர் குறித்த இலக்கியம், வரலாறு, சமயம், புராணங்கள் உள்ளிட்ட புராண செய்திகள் வாய் மொழியாய் வந்துள்ளன. இவை வழக்காறுகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாய் பல்வேறு தளங்களுடன் திகழ்கின்றன.
பொதிகை மலையில் ஆஸ்தான மூல ஸ்தலம்
இருப்பினும் அகத்தியரின் ஆஸ்தான மூல ஸ்தலமாக பொதிகையில் உள்ள அகத்தியர் மலையையே அனைவரும் குறிப்பிடுகின்றனர்.
அகத்தியர் பீடம்
இதற்கு உதாரணமாக பொதிகை மலையில் உள்ள அகத்தியரின் சிலை, பீடம், குகை ஆகியவற்றை கூறலாம். இவை தற்போதுவழிபாட்டு ஸ்தலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு சித்தர்கள் மட்டுமின்றி சித்தர் வழிபாட்டினரும், ஆன்மிக நம்பிக்கை கொண்ட மக்களும் சென்று வழிபட்டு வருகின்றனர்.
அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை
பொதிகை மலையிலிருந்து 30 கி.மீ.,தூரத்தில் 7 ஆயிரத்து 500 அடி உயரத்தில் திரிகூட மலையில் செண்பகாதேவி அருவிக்கு மேலே உள்ளது. இப்பகுதியில் தட்சிணாமூர்த்தி குகை, ஜோதீஸ்வரர் குகை, கரடி குகை, பரதேசி குகை, அகத்தியர் கோவில், அகத்தியர் பாதம், அகத்தியரின் முதல் சீடரான புலத்தியரின் சமாதி போன்றவை உள்ளன. அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை மூன்றரை அடி உயரத்தில் இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடது காலை நீட்டியும் வலது காலை மடக்கியும்
இம்மலை பகுதியில் பால விநாயகர் சிலை பளிச்சிட்டு வருவதை பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். விநாயகர் இடது காலை நீட்டியும், வலது காலை மடக்கி வைத்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சிலை இருக்கும் மலை சிவலிங்கம் போல் தோற்றம் அளிக்கிறது.
பண்டைய தமிழ் எழுத்துக்கள்
இங்குள்ள பாறைகளில் விநாயகரை சித்தர்கள் வழிபடுவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அகத்தியர் பயன்படுத்திய பண்டைய தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுகள் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் சேர, பாண்டிய மன்னர்கள் கட்டிய மிகவும் தொன்மையான கட்டடம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
வனத்துறையினரின் கெடுபிடி
பக்தர்கள் எளிதில் செல்ல முடியாத அளவிற்கு இப்பகுதி முழுவதும் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. வனத்துறையினர் மனம் வைத்தால் பக்தர்கள் அகத்தியர் வழிபட்ட பால விநாயகரை தரிசனம் செய்யலாம். செண்பகா தேவி அம்மன் கோவிலுக்கே வழிபாடு நடத்த செல்லும் பக்க்தர்களை தடுக்கும் வனத்துறையினர் அகத்திய முனிவர் வழிபட்ட விநாயகர் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுப்பார்களா...?