கல்மாடியின் 'கடைசி' ஆசையைப் பாருங்க... ஷில்பா ஷெட்டி டான்ஸுக்காக ரூ. 71 லட்சம் விரயம்

ஷில்பாவுக்கு திருமணம் ஆகி போவதற்குள், கட்டக் கடைசியாக ஒருமுறை அவரது ஆட்டத்தைப் பார்க்க விரும்பியதால் பிடிவாதம் பிடித்து இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாராம் கல்மாடி.
கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டி பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நடந்து முடிந்தது. இதில் நடந்த மிகப் பெரிய ஊழல்கள் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் கல்மாடி. மேலும், கைதும் செய்யப்பட்டு திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் கோர்ட்டில் கல்மாடி தொடர்பான இன்னொரு ஊழலையும் சிபிஐ அம்பலப்படுத்தியது.
அதாவது 2008ம் ஆண்டு புனே நகரில் இளைஞர்களுக்கான காமன்வெல்த் விளையாட்டு்ப போட்டி நடந்தது. அப்போது கல்மாடிதான் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருந்தார்.
அப்போட்டியின் நிறைவு விழாவின்போது தேவையே இல்லாமல் திடீரென ஷில்பா ஷெட்டியின் டான்ஸைச் சேர்த்துள்ளனர். இது கல்மாடியின் வலியுறுத்தலின் பேரில் நடந்ததாம். ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கடைசி முறையாக அவரது நடனத்தைப் பார்க்கத் துடித்தாராம் கல்மாடி. இதற்காகவே அவரது டான்ஸை ஒற்றைக் காலில் நின்று சேர்த்து விட்டாராம்.
இந்த நடனத்துக்காக ரூ. 71.73 லட்சம் பணம் வாரியிறைக்கப்பட்டுள்ளதுதான் மிகப் பெரிய கொடுமையாகும். கல்மாடி பார்த்து ரசிப்பதற்காக இப்படி பெரும் பணத்தை எடுத்து செலவிட்டு வீணடித்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் கல்மாடி தவிர, பரீதாபாத்தைச் சேர்ந்த ஜெம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பி.டி.ஆர்யா, ஏ.கே.மதன் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மதனும், ஆர்யாவும் 2010 காமன்வெல்த் போட்டி ஊழலிலும் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications