சைக்கிள் மீது கிரிக்கெட் பந்து பட்டதற்காக அடித்து நொறுக்கிய ஆசிரியர், மரணமடைந்த 12 வயது மாணவன்
சம்பரான்: பீகாரில் கிரிக்கெட் பந்து சைக்கிளில் பட்டதற்காக ஆசிரியர் அடித்ததில் 12 வயது மாணவன் மரணம் அடைந்தார்.
வட பீகார், சம்பரான் மாவட்டம் பகரிதயாலில் உள்ளது மாடர்ன் பப்ளிக் பள்ளி. அந்த பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்த மாணவன் சோட்டன் சிங் என்பவரின் மகன் சேகர் குமார்(12). கடந்த சனிக்கிழமை இரவு சேகர் குமார் வீசிய கிரிக்கெட் பந்து பட்டு ஆசிரியர் ஒருவரின் சைக்கிள் சேதமடைந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் சேகரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பள்ளியின் உரிமையாளர்கள் காசி ஷா மற்றும் அவரது மகன் பப்பு ஜெய்ஸ்வால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். காசி ஷாவை கைது செய்த போலீசார் அவரது மகனை தேடி வருகின்றனர்.
ஹாஸ்டலில் ஆசிரியர் யாரும் இல்லாததால் பிற மாணவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் பரிசோதனையில் மாணவன் தற்கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக சேகர் ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தன்னை அடித்துக் கொண்டே இருப்பதாக தனது தாய் சந்தா தேவியிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications