டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: போலீசுக்கு தகவல் கொடுத்த காவலாளி இன்று சாட்சியம்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று தொடரவிருக்கிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான மாணவியின் நண்பர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்த சம்பவம் பற்றி விளக்கினார்.
முன்னதாக போலீசார் பிரேத பரிசோதனை மற்றும் தடவியல் அறிக்கைகளை சமர்பித்தனர். இந்த வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் அருகே இருந்தவர்கள், போலீஸ் அதிகாரிகள், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்று மொத்தம் 88 பேர் சாட்சியமளிக்க உள்ளனர்.
இந்த 88 பேரிடமும் ஒரு மாதத்திற்குள் சாட்சியம் பெற நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அந்த மாணவியை கற்பழித்த 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு மட்டும் சிறார்களுக்கான குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்கவிருக்கிறது. மாணவியும் அவர் நண்பரும் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவலாளி இன்று சாட்சியம் அளிக்கிறார்.