ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன் மீதான பலத்கார வழக்கு- கேரளாவில் வலுக்கும் போராட்டம்
திருவனந்தபுரம்: சூரியநெல்லி இளம்பெண் பலத்கார வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கேரள சட்டபேரவை முன்பு நடந்த போராட்டத்தில் இரண்டு பெண் எம்எல்ஏக்கள் காயமடைந்தனர்.
கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்திய சூரியநெல்லியைச் சேர்ந்த இளம்பெண் பலத்கார வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தன்னை பலத்காரம் செய்தவர்களில் மாநிலங்களவை துணை தலைவர் பி.ஜே. குரியனும் ஒருவர் என்று அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் மீது தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளாவில் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. வெளிநடப்புச் செய்த எதிர்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாதர் சங்கம் போராட்டம்
நேற்று சட்டப்பேரவை கூடியதும் ஜனநாயக மகளிர் சங்கத்தினர் பேரவை முன் குவிந்தனர். 150க்கும் மேற்பட்ட பெண்கள் பேரவைக்குள் நுழைய முயன்றனர். போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் காயமடைந்தனர். 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பினர் பிஜிமோள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடத்தினர். பேரவைக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்தபோது பிஜிமோளின் கழுத்தில் இருந்த சங்கிலி அறுந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும் எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் எம்எல்ஏக்கள் அங்கு வந்தனர். காயமடைந்த பிஜிமோளை தனது காரில் ஏற்றி கொண்டு பேரவைக்கு சென்றார். அங்கு சென்ற பிஜிமோள், போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டினார். அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.
எதிர்கட்சிகள் வெளிநடப்பு
இதனிடையே குரியன் மீதான குற்றச்சாட்டுக்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறிய அச்சுதானந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்றும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
எனக்கு எதிராக சதி
இதனிடைய செய்தியாளர்களிடம் பேசிய குரியன், சூரியநெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது. பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் என்னுடையை பெயரை மீண்டும் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புகாரில் புதுமை ஒன்றும் இல்லை. நீதிமன்றத்தில் அது செல்லுபடியாகாது. இந்த விவகாரத்தில் என்னுடைய பெயரை களங்கப்படுத்துவதற்காக சதி நடக்கிறது. என்னுடைய பதவிக்கு சிலர் குறிவைத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications