2.44. டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கும் குட்டு

வழக்கு என்ன?
தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. நீர் கோரி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வார விசாரணையின் போது குறைந்தபட்சம் 9 டி.எம்.சி. நீரையாவது திறக்கவும் தமிழகம் கோரியது. ஆனால் கர்நாடகா பிடிவாதமாக மறுத்தது. இதைத் தொடர்ந்து மத்திய உணவுத்துறை துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா, கே.எஸ். ஜேக்கப், ஏ.மகேந்திரன் ஆகிய அடங்கிய குழுவை அமைத்து திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனடிபப்டையில் 14 இடங்களில் மத்திய குழுவினர் சம்பா சாகுபடியை நேரில் பார்வையிட்டனர்.
இதனடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட சம்பா சாகுபடியை காப்பாற்ற 2.44 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்று மத்திய குழு பரிந்துரைத்தது.
இன்று விசாரணை
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. மத்திய குழு திறமையாக செயல்பட்டு ஒரே நாளில் தமது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பதாக நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், மத்திய குழுவானது 10% பகுதியைத்தான் பார்வையிட்டது. தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. நீர் தேவை என்றும் கூறினார்.
தமிழகத்துக்கு குட்டு
இதற்கு கடுமையாக எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்த நீதிபதிகள், "உங்களைப் பொருத்தவரையில் நீங்கள் என்னவெல்லாம் சொல்லுகிறீர்களோ அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியெல்லாம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றனர்.
மேலும் கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான ஃபாலி நாரிமன், காவிரியில் 2.44 டி.எம்.சி. நீரை தரமுடியாது.. 2 டி.எம்.சி. நீரை மட்டுமே தர முடியும் என்று வாதிட்டார்.
இரு மாநிலங்களுக்கும் எச்சரிக்கை
இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசும் கர்நாடக அரசும் உச்சநீதிமன்றம் முன்பாக பல புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.. இப்படி தாக்கல் செய்யப்படும் புள்ளி விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இரு மாநில அரசுகளும் தவறான புள்ளி விவரங்களைக் கொடுத்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
பின்னர் மத்திய குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications