செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம்
இது குறித்து தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் அறப்போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 7.2.2013 காலை 8.30 மணிக்கு நிறுவனத்தின் வாயிலில் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது.
உணர்ச்சியுடனும் எழுச்சியுடனும் நடைபெற்ற இப்போராட்டத்திற்குப் பணியாளர் சங்கத் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு தலைமை தாங்கினார். செயலாளர் முனைவர் ப.கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.
இப்போராட்டத்தில் முனைவர் அ.ஆரோக்கியதாசு அவர்கள் கூறுகையில்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை நிர்மானம் செய்தபொழுதே பணியாளர்களின் பதவிகளும், பணியிடங்களும் வரையறை செய்யப்பட்டு மொத்தம் 149 பணியிடங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணியிடங்களை பூர்த்தி செய்துவிட்டு மேலும் பணியிடங்களைத் தேவைக்கேற்ப கேட்டுப் பெறலாம். ஆனால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 2008ம் ஆண்டு உருவாக்கம் செய்வதற்கு முன்பு ஆய்வு மையமாக இயங்கி வந்த காலந்தொட்டும், நிறுவனம் தொடங்கிய காலந்தொட்டும் பல்லாண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்கள் அனைவரையும் இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்ல. இங்கு நிரந்தரப் பணியாளர்களாக யாரும் இல்லை. பதிவாளரும் நிதி அலுவலரும் இரண்டாண்டுகளுக்கு பிரதிநிதிகளாக (டெபுடேஷனில்) பணியாற்றி வருகின்றனர். இன்னும் இந்நிறுவனத்திற்கு முழுநேர நிரந்தர இயக்குநர் நியமிக்கவில்லை. பொறுப்பு இயக்குநராக தமிழுக்குத் தொடர்பில்லாதவர்களை நியமிப்பதால் இந்நிறுவனத்தின் நோக்கம் சிதைவடைவதோடு தொலைநோக்குத் திட்டங்கள் அனைத்தும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் இங்கு ஓய்வு பெற்ற பின்பு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆய்வறிஞர்கள் எனும் பெயரில் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000 முதல் ரூ. 80,000 வரை கொடுக்கப்படுகிறது. மொத்தப் பணியாளர்களான 83 பேரில் ஓய்வு பெற்றவர்களைத் தவிர நிரந்தரப் பணிக்குத் தகுதியானவர்கள் வெறும் 63 பேர் மட்டுமே. மீதமுள்ள 20 பேர் ஓய்வு பெற்ற பின்பு இங்குவந்து பணியாற்றுபவர்கள். இந்த 63 பேரில் 44 பேர் பல்லாண்டுகளாக தொடர்ந்து தினக்கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 19 பேர் மட்டுமே மாத ஊதியதாரர்களாக உள்ளனர்.
இந்தியாவில் தமிழுக்கு மத்திய அரசின் நேரடி நிதியில் இயங்கும் ஒரே நிறுவனம் இது மட்டுமே. அதுவும் இரண்டு நூற்றாண்டுகளாக தமிழ்ப் பேரினம் முழுமையும் போராடி செம்மொழித் தகுதியைப் பெற்றதனால் இவ்வாய்ப்புத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட இந்நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ்க்குடிகளான எம் பணியாளர்களுக்கு தொடர்ந்து இப்படிப்பட்ட தீங்குகள் இழைக்கப்பட்டு வருகின்றன. பெண் பணியாளர்களுக்கு பேருகால விடுப்புக் கூட மறுக்கப்பட்டு வருகிறது. பேறுகாலத்திற்குச் சென்ற பெண் பணியாளர்களை மீண்டும் பணியில் சேரவிடாமல் தடுத்து பணி நீக்கம் செய்து வருகின்றனர். இக்காரணங்களாலும், அடிப்படை வசதிகளும், வாய்ப்புகளும் நிர்வாகத்தினரால் தடுக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு பணியாற்றும் பெண் பணியாளர்கள் கருச்சிதைவு போன்ற பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பல்வேறு அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை போன்ற அறப்பாராட்டங்களை பணியாளர் சங்கம் நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு ஆடை அணிந்து தொடர் அறப்போராட்டத்தை கடந்த மூன்று நாட்ளாக நடத்தி வருகின்றோம். பணியாளர்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு உடனடியாக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2009ம் ஆண்டு முதல் வழங்காமல் தடுத்து வைத்திருக்கும் 72% ஊதிய உயர்வை உடனடியாக முந்தேதியிட்டு வழங்க வேண்டும். தினக்கூலி முறைமையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய அறிவிப்பை மத்திய அரசு காலந்தாழ்த்தாது உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசில் அங்கம் வகித்து வரும் முன்னால் முதல்வர் கருணாநிதியும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளையும், சமுதாய அமைப்புகளையும் ஒன்று திரட்டி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம். இத்தகைய சூழ்நிலையை தமிழர்களுக்கும், தமிழ் பணியாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்காமல் உடனடியாக மூன்றம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications