புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனை மற்றும் கல்லூரியாக மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர். வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் கே.என். பாஷா, என். பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த மாதம் 24ம் தேதி தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செயய்ப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டடிடத்தை மருத்துவமனையாக மாற்ற மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஆர். வீரமணி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
இது போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திற்கு இல்லை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைதான் ஒப்புதல் அளிக்க முடியும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், ஆர். நாகேந்திரன் ஆகியோர் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஆர்.வீரமணி தொடர்ந்துள்ள இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக அரசு எப்படி மாற்றியது? எனவே அந்த (புதிய தலைமை செயலகம்) கட்டிடத்தில் எந்த மாற்றங்களும் செய்யக் கூடாது. மருத்துவமனை அமைக்கும் விதமான நடவடிக்கைகளும் செய்யக் கூடாது. அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த கட்டிடத்தில் மாற்றங்கள் செய்ய இடைக்கால தடை விதிக்கிறோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலக கட்டிடம் ஏற்கனவே மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications