‘அட்டாக்’ கூட்டாளிகள் வீடுகளில் போலீஸ் ரெய்டு… ஆயுதங்கள் பறிமுதல்
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகியுள்ள அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் வீடுகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் சரண் அடைந்தனர். அந்த 7 பேரையும் காவலில் எடுத்த போலீசார், தொடர்ந்து 3-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோவில் பதிவு
நேற்று பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பொட்டு சுரேசை கொலை செய்ய தூண்டிவிட்ட முக்கிய புள்ளி யார்? இந்த கொலைக்கு கைமாறிய லட்சங்கள் எவ்வளவு? யார், யாருக்கு எவ்வளவு பங்கு? என்பதை பற்றியெல்லாம் விசாரித்து போலீசார் தெரிந்து கொண்டனர். யார், யாரெல்லாம் பொட்டு சுரேசை வெட்டினார்கள், எப்படி வெட்டினார்கள் என்பதை நடித்து காட்ட சொல்லி அதனை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
இந்த நிலையில் சரண் அடைந்த 7 பேரின் வீடுகளிலும் போலீஸ் படையினர் தனித்தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி அவர்களது வீடுகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சபாரத்தினம் என்பவரது வீட்டில் இருந்து பெரிய பட்டாக்கத்தி ஒன்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல மற்ற 6 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் தனிப்படை போலீசாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணையின் தகவல்கள் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் அட்டாக் பாண்டி மட்டும் இதற்கு காரணமா? அல்லது அவரை இயக்கியது வேறு யாருமா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
கேரளாவில் பதுங்கல்
பொட்டு சுரேஷ் கொலையில் மூளையாக செயல்பட்டதாக போலீசார் தொடர்ந்து தேடி வரும் அட்டாக் பாண்டி எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அநேகமாக அவர் மும்பை அல்லது கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.