ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்ன குஷ்பு வீடு மீது தாக்குதல்... கல்வீச்சு!
சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ள நடிகை குஷ்பு, "திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.
திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார். இந்த பேட்டி அடங்கிய இதழ் இன்று வெளியான சில மணி நேரங்களில் திமுகவினரிடையே பரபரப்பு கிளம்பியது.
ஸ்டாலின் ஆதரவாளர்கள் 50 பேர், சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு திரண்டனர். குஷ்புவை கடுமையாகத் திட்டிய அவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன.
இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களைக் கலைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர் சி இருவரும் வீட்டில் இல்லை. குஷ்புவின் இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களிடம் போனில் கதறி அழுதபடி குஷ்பு நடந்தவற்றை விசாரிததார்.
இது தொடர்பாக கைதானவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.