டெல்லியில் மீண்டும் கொடூரம்: பிளாக் பிலிம் ஒட்டிய காரில் இளம்பெண் கற்பழிப்பு
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேரால் கற்பழிக்கப்பட்டு இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் 24-பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லி ரோகினி பகுதி செக்டர் 16ல் வசிக்கும் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை இரவு தனக்கு பழக்கமான முகமது ஷாகில்(எ) அலியை(23) சந்திக்க ஸ்வரூப் நகருக்கு சென்றுள்ளார். அங்கு தனது 3 நண்பர்கள் முகமது இர்சாத்(30), முகமது ஆபித்(21) மற்றும் லஜ்பட்ராய் சச்தேவா(38) ஆகியோருடன் இருந்த ஷாகில் அப்பெண்ணை அருகில் உள்ள உத்தரகண்ட் காலனிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த 4 பேரும் அவரை கற்பழித்துள்ளனர்.
இதையடுத்து அப்பெண்ணை கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஏற்று பராரி சென்றுள்ளனர். காரில் செல்லும்போதே அவர்கள் அப்பெண்ணை மீண்டும் கற்பழித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு பராரி பகுதியில் செல்கையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளது. ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து பிற போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் கொடுத்து அந்த காரை அதிகாலை 2.53 மணி அளவில் போலீசார் மறித்தனர்.
அந்த பெண்ணை மீட்ட அவர்கள் அவர் கூறிய விவரத்தை வைத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. பின்னர் போலீசார் அந்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.