திருப்பதியில் 144 தடை உத்தரவு! எல்லையில் தமிழ் அமைப்பினர் தடுத்து நிறுத்தம்!
திருப்பதி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக திருப்பதியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு தமிழ் அமைப்பினரும் கட்சியினரும் தெரிவித்திருப்பதால் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ராஜபக்சே ஒடிஷாவின்கட்டாக்கிலிருந்து திருப்பதி சென்றடைகிறார். அங்கு இன்று தங்கும் அவர் நாளை காலை சாமி தரிசனம் செய்துவிட்டு கொழும்பு திரும்புகிறார். தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருமலை செல்லும் வழியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட மதிமுகவினர் திருப்பதிக்கு ரயில் மற்றும் சாலை வழியாக சென்றனர். ரயிலில் சென்ற ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். சாலை வழியாக சென்றவர்கள் எல்லைப் பகுதியிலே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் திருப்பதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.