தமிழகத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்- கைது!
சென்னை/கோவை/நெல்லை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் நெல்லையில் மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசியி்ல் கொடும்பாவி எரிப்பு
இதேபோல நெல்லை மாவட்டம் தென்காசியிலும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது.