தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிக்கப் பாயும் அளவுக்கு அப்படி என்ன பேசினார் திட்டக்குடி தமிழழகன்?

அவர் இன்று சட்டசபையில் பேசிய பேச்சால் கோபமடைந்துதான் அவர்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவரைக் காப்பாற்றப் போய் மைக்கேல் ராயப்பன் சிக்கி அடிவாங்கி விட்டார்.
தமிழழகன் பேசிய பேச்சு இதுதான்...
நான் முதல்வர் அம்மாவை சந்தித்து என் தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை வைத்தேன். அவற்றை அம்மா கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது அவருக்கு தெய்வ சக்தி பாய்ந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை எனது திட்டக்குடி தொகுதியில் கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
என் தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 400 குடும்பத்துக்கு இலவச பட்டா கேட்டு, அந்த கோரிக்கையும் நிறைவேறி உள்ளது. பெரியபாளையம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ரூ. 22 கோடி ஒதுக்கி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது மட்டுமல்ல தொகுதியில் என்ன பிரச்சினை என்றாலும் தன்னை நேரில் சந்திக்க முதல்வர் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நான் அம்மாவை சந்தித்த பிறகு தொகுதி மக்களிடம் எனக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. மற்றவர்களும் இந்த வழியை பின்பற்றினால் அவர்கள் தொகுதிக்கு கிடைக்க வேண்டியவை கிடைத்து முன்னேற்றம் அடையும். விரைவில் எனது திட்டக்குடி தொகுதி ஒரு முன் மாதிரி தொகுதியாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே நீங்களும் இந்த வழியை பின்பற்றி அம்மா பக்கம் வந்தால் உங்கள் தொகுதியும் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.
இதுதான் தமிழழகன் பேசிய பேச்சு. இதன் பிறகுதான் தேமுதிகவினர் கோபமடைந்து அவர் மீது பாய்ந்தனர்.












Click it and Unblock the Notifications