விஐபிக்களை விட பொது மக்களுக்குதான் பாதுகாப்பு அவசியம்! – உச்ச நீதிமன்றம்

நாட்டில் 761 பேருக்கு ஒரு போலீஸ்தான் பாதுகாப்புக்கு உள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். அதேசமயம் விஐபிக்களுக்கு ஒருவருக்கு 3 போலீசார் பாதுகாப்பு தருகின்றனராம்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், பல காலமாக எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு குறித்து அதிருப்தி தெரிவித்தது.
மேலும் முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு விவரம் மற்றும் அதற்கு ஆகும் செலவு ஆகிய விவரங்களை தாக்கல் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு
அப்போது நீதிபதி கூறியதாவது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், இந்திய தலைமை நீதிபதி, அரசியலமைப்பு ஆணையத்தின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கலாம்.
எதற்காக இவ்வளவு பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது? மாநிலத்தின் தெருக்களிலும், சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தால் நீதிபதிகளுக்குக் கூட தனிப்பட்ட பாதுகாப்பு பிரச்னை இருக்காது.
பதில்மனு தாக்கல்
முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பை சாலைகளில் ஏற்படுத்தினால், பெண்கள் பாதுகாப்பாக சென்று வர முடியும். வருகிற திங்கள் கிழமைக்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.அன்று பதில் மனுத் தாக்கல் செய்யாத மாநிலத்தின் உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவரது பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அதற்கு ஆகும் செலவு குறித்து பல்வேறு மாநில அரசுகள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
விஐபிக்கள் பாதுகாப்பு
முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை அறிக்கை அளித்துள்ளது.
நாடு முழுவதும் 14,842 பேருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவர்களுக்காக 45,557 போலீசார் கடந்த 6 மாதங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பீகாரில் அதிகம்
அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 3,030 பேருக்கும், பஞ்சாபில் 1,798 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.இதில் பஞ்சாபில் அதிகபட்சமாக 5,811 போலீசாரும், டெல்லியில் 427 முக்கிய பிரமுகர்களுக்கு 5,183 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
253 பேருக்கு 1 போலீஸ்
முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் நாட்டிலேயே டெல்லியில்தான் விகிதாசாரம் அதிகம். ஒரு விஐபிக்கு தலா 12 பேருக்கும் மேல் ஈடுபடுத்தப்படுகின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 253 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்தான் டெல்லியில் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications