அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது சரியான செயல் - பாஜக
டெல்லி: அப்சல் குருவைத் தூக்கிலிட்டது சரியான செயல். இதை பாஜக வரவேற்கிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாமதமாக வழங்கப்பட்டாலும் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்கிறோம். அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். நீண்ட காலமாக இதற்காக அவர்கள் காத்திதருந்தனர். அவரை தூக்கிலிட்டது மிக சரியான முடிவு. இந்த விஷயத்தில் நாங்கள் எப்போதும் அரசுக்கு உறுதுணையாகவே இருந்து வருகிறோம் என்றார்.
கட்சியின் இன்னொரு செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இது தீவிரவாதிகளுக்கு நல்ல எச்சரிக்கையாக அமையும். மக்களிடமிருந்து அதிகரித்து வந்த நெருக்குதலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு எடுத்துள்ளது என்றார்.
மூத்த பாஜக தலைவரும், நாடாளுமன்றத் தாக்குதலின்போது உயிர் தப்பியவருமான நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், தீவிரவாதிகளுக்கு மதம், ஜாதி என்று எதுவுமே கிடையாது. தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் தீவிரவாதிகள்தான். அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா, இல்லையா என்பதுதான் முக்கியம் என்றார்.












Click it and Unblock the Notifications