சூரியநெல்லி சிறுமி விரும்பியே பாலியல் தொழிலில் ஈடுபட்டார்-நீதிபதி கருத்தால் சர்ச்சை
திருவனந்தபுரம்: சூரியநெல்லி பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை குறித்து கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறிய கருத்து கேரளாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடத்தப்பட்டு 40க்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தன்னை பலாத்காரம் செய்தவர்களில் மாநிலங்களவை துணை தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.ஜே. குரியனும் ஒருவர் என அப்போதே அந்த சிறுமி போலீசிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் 35 பேருக்கு 10 வருட சிறை தண்டனையும், சிறுமியை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த தர்மராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை அளிக்கப்பட்ட அனைவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதை விசாரித்த அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி பசந்த், அப்துல் கபூர் அடங்கிய பெஞ்ச் அனைவரையும் விடுதலை செய்தது. தர்மராஜனின் ஆயுள் தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்படவில்லை. அவரது விருப்பப்படி தான் நடந்துள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி நேற்று தலச்சேரியில் ஒரு வக்கீல்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். அப்போது ஒரு தனியார் தொலைகாட்சி நிருபர் அவரை சந்தித்தார். அப்போது சூரியநெல்லி விவகாரம் குறித்து சாதாரணமாக கேட்டுள்ளார். அப்போது அவர் சூரியநெல்லி சிறுமி சிறுவயதிலேயே வழி தவறிவிட்டார். இளம் வயதில் அவர் விரும்பியே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவரை யாரும் சிறை பிடித்து வைக்கவில்லை. சிறுமி நினைத்திருந்தால் தப்பி இருக்கலாம். சம்பவம் நடந்த நாட்களில் அவர் தொண்டை வலிக்காக டாக்டரிடம் சென்ற ஆதாரம் இருக்கிறது. நான் அளித்த தீர்ப்பை சரியாக படிக்காமல் உச்ச நீதிமன்றம் தவறான கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதி பசந்தின் இந்த கருத்தை தனியார் தொலைகாட்சி நிறுவனம் ரகசியமாக படம் பிடித்து ஒளிப்பரப்பியது. இதையடுத்து கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதியின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சி தலைவர் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications