துறையூரில் ரூ7 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க நகை கொள்ளை
துறையூர்: திருச்சியை அடுத்து துறையூரில் நகைக் கடை மற்றும் வீட்டில் 5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
துறையூரில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வந்தவர் சத்திய நாராயணா. கடையின் மாடியில் பைனான்ஸ் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இவரது வீட்டு கடையின் பின்புறத்தில் உள்ளது.
இன்று காலை அவர் கடையை பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கடையின் ஷோகேசில் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
மொத்தம் ரூ7 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க நகை, 50 கிலோ வெள்ளி நகைகள், ரூ10 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்பகுதி வாய்க்கால் ஒன்றில் சாக்குமூட்டை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அதில் திருடப்பட்ட சில வெள்ளிப் பொருட்கள் இருந்தன.
கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்