பொட்டு சுரேஷ் கொலை- அட்டாக் பாண்டியுடன் மேலும் மூவருக்கு போலீஸ் வலை
மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாகி இருக்கும் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டியுடன் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொட்டு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடக்கத்தில் வாயை திறக்க மறுத்தவர்கள் போலீசாரின் 'தீவிர' விசாரணையில் தற்போது உண்மைகளைக கூறி வருகின்றனர்.
இக்கொலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள்தான் இந்தக் கொலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று 7 பேரிடம் விவரித்திருக்கின்றனர்.
மேலும் கொலையாளிகள் 18 சிம்கார்டுகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சிம்கார்டுகளில் பலவற்றை கொலையை செய்து முடித்தவுடன் அழித்தும் இருக்கின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், பட்டாக் கத்திகள் ஆகியவற்றை மறைத்து வைத்த இடத்தையும் கொலையாளிகளில் ஒருவரான சபாரத்தினம் காட்டிக் கொடுக்க போலீசார் அவற்றையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் அட்டாக் பாண்டியுடன் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.