நான் கடவுள் பாட்டுடன் கும்பமேளாவில் வலம் வந்த நித்தியானந்தா- பாதுகாப்புக்கு 2 வாட்ச்மேன் வேற...!
சென்னை: அலகாபாத் கும்பமேளாவில் எத்தனையோ சாமியார்கள், விதம் விதமான சாமியார்கள் கங்கையில் முழுக்குப் போட்டுச் சென்றனர் கும்பமேளாவின்போது. நமது நித்தியானந்தாவும் கூட அவர்களில் ஒருவராக தனது சிஷ்யப் பிள்ளைகள் புடை சூழ வந்து குளித்து விட்டுப் போனார்.
பல்வேறு பாஷைகளும் புழங்கிய அந்த இடத்தில், ஆர்யா நடித்த தமிழ் சினிமாப் படமான 'நான் கடவுள்' படத்தி்ல இடம் பெற்ற 'ஓம் சிவோஹம்...' என்ற பாடலை அந்த இடத்தில் ஒலிக்க வைத்து அசத்தினார்.
மகா கும்பமேளாவின்போது புனித நீராடுவதற்காக 3 கோடி பேர் வரை திரண்டதாக ஒரு புள்ளி விவரத் தகவல் சொல்கிறது. ஆனாலும் அந்த கோடியில் ஒருவராக, அனைவரையும் பளிச்சென கவர்ந்தவர் நம்ம நித்தியானந்தாதான். தனது ஆதரவுப் பரிவாரங்களுடன் ரவுண்டு அடித்துக் கலக்கி விட்டார் கும்பமேளாவையே...
பாவம் தீர்க்கும் குளியல்
மெளனி அமாவாசையன்று திரிவேணி சங்கமித்தில் புனித நீராடினால் எப்படிப்பட்ட பாவமும் கரைந்து போய் விடும் என்பார்கள். அந்த நாளில்தான் நித்தியானந்தாவும் புனித நீராடினார்.
சும்மா, சினிமா செட் போல...
திரிவேணி சங்கமத்தின் கரைப் பகுதியில் ஏகப்பட்ட சாமியார்கள் டென்ட் அடித்து தங்கியிருந்தனர். அவர்களில் நித்தியானந்தாவும் ஒருவர். ஆனால் அவரது டென்ட்தான் சும்மா சினிமாக்காரர்கள் போட்ட செட் போல பளபளவென பளீரிட்டது.
100 ஆட்களை இறக்கி அதகளம்
தனக்கு மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காகவே, பெங்களூரிலிருந்து 100 பேரை வரவழைத்து தன்னுடனேயே தங்க வைத்து சிலம்பி விட்டாராம் நித்தியானந்தா.
ராஜ பாதுகாப்பு
நித்தியானந்தாவை யாரும் சீக்கிரம் அண்டி விட முடியாத அளவுக்கு செமத்தியான பாதுகாப்பு வேறு. யாரும் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாத அளவுக்கு பாதுகாப்பாம்.
குளிக்கப் போவதற்கு ரதத்தில் ஊர்வலம்
புனித நீராடலுக்குக் கிளம்பிய நித்தியானந்தா செல்வதற்காகவே ஒரு ரதத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் வெள்ளி சிம்மாசனம் வேறு. அதில் அமர்ந்தபடிதான் குளிக்கப் போனாராம் நித்தியானந்தா.
ஆர்யா பட பாட்டு ஓலிக்க
குளிக்கப் போக்கும்போது சாமி பாட்டு போட வேண்டுமே... என்ன பாட்டு போடுவதென்றுயோசித்து நான் கடவுள் படத்தில், அகோரி வேடத்தில் ஆர்யா நடித்தபோது பாடப்படும் ஓம் சிவோஹம் என்ற பாடலை ஒலிக்க விட்டு ஏரியாவையே களேபரப்படுத்தி விட்டனராம்
நித்தி போட்ட குளியல்.. பாதுகாப்புக்கு 2 வாட்ச்மேன்!
நித்தியானந்தா தண்ணீ்ரில் முங்கி முங்கிக் குளித்தபோது 2 கமாண்டோக்கள் பக்கத்திலேயே பாதுகாப்பாக நின்றிருந்தனராம். குளிக்கும்போது ஏன் இவ்வளவு பாதுகாப்பு என்று சுற்றியிருந்தவர்கள் சற்றே வியந்தனராம்.மேலும் யாருப்பா இந்த விஐபி என்றும் கிசுகிசுத்துக் கொண்டனராம்.
வாட்ச்மேன் டிரஸ்ஸுக்கு தனிக் காசாம்
கமாண்டோக்கள் கையில் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கியா என்பது தெரியவில்லை. ஆனால் வாட்ச்மேன்களை ஏற்பாடு செய்யும் தனியார் ஏஜென்சி ஒன்றைப் பிடித்து இவர்களை செட்டப் செய்தார்களாம். வாட்ச்மேன் டிரஸ் போடாமல் கமாண்டோ டிரஸ்ஸைப் போட்டு வர வேண்டும் என்றும் கூறி கூட்டி வந்தார்களாம். அதற்காக தனியாக காசும் கொடுத்தார்களாம்.
ஜெயேந்திரர் கொட்டாய்க்குப் போய் அவருடன் ஒரு சந்திப்பு
நித்தியானந்தாவின் இந்த கும்பமேளா விசிட்டின்போது ஜெயேந்திரரையும் நைஸாக சந்தித்து விட்டார் அவர். மதுரை ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டபோது கடுமையாக அதை விமர்சித்தவர் ஜெயேந்திரர். ஆனால் தற்போது நித்தியானந்தா தன்னை வந்து சந்தித்தபோது சிரித்தபடி பேசினாராம் ஜெயேந்திரர்.
ரஞ்சிதா வந்தாரா...??
நித்தியானந்தாவுடன் நிறைய ஆண்களும், கூடவே ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். ஆனால் ரஞ்சிதா வந்திருந்தாதாரா என்பது தெரியவில்லை...