ஹெலிகாப்டர் ஊழல்: டெண்டர்கள் திருத்தப்பட்டது பாஜக ஆட்சியில் தான்- முன்னாள் விமானப் படை தளபதி

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது ஆலோசகராக இருந்தவர் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த டெண்டர் முறைகேடுகளில் மிஸ்ராவுக்குத் தொடர்பு இருப்பதாகவும், டெண்டரின் சில முக்கிய அம்சங்கள் திருத்தப்பட்டது 2003ம் ஆண்டு வாஜ்பாயின் ஆட்சியில் தான் என்றும் தியாகி கூறியுள்ளார்.
பறக்கும் உயரத்தையே மாற்றி டெண்டர்!!!!!:
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையின் டெண்டரில் இடம் பிடிக்கும் அளவுக்கு சில விதிமுறைகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் 18,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்கள் தான் வேண்டும் என்று தனது டெண்டரில் விமானப் படை கூறியிருந்தது. ஆனால், 15,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களே போதும் என்று டெண்டர் மாற்றப்பட்டது. காரணம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் 15,000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் திறன் அற்றவை.
என்ஜினை வைத்து சாதகம்:
மேலும் ஒரு என்ஜினில் அல்லது இரு என்ஜின்களிலும் கோளாறு ஏற்பட்டாலும் சமாளிக்கும் திறன் கொண்டதாக ஹெலிகாப்டர்கள் இருக்க வேண்டும் என்ற புதிய விதியும் டெண்டரில் சேர்க்கப்பட்டது. இதற்குக் காரணம், உலகின் முன்னணி ஹெலிகாப்டர்களில் 3 என்ஜின்கள் கொண்ட ஒரே ஹெலிகாப்டர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தான். இதன்மூலம் இது தான் மிகச் சிறந்த ஹெலிகாப்டர் என்பது போல காட்டப்பட்டுள்ளது.
இந்த திகிடுதித்தங்களை தான் செய்யவில்லை என்றும், தான் விமானப் படை தளபதி ஆவதற்கு முன்பே 2003ம் ஆண்டிலேயே பாஜக ஆட்சியிலேயே இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டதாகவும் தியாகி கூறியுள்ளார்.
நான் 2004 முதல் 2007ம் ஆண்டு வரை விமானப் படைத் தளபதியாக இருந்தேன். அந்த நேரத்தில் ஹெலிகாப்டரின் டெண்டரில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை. இதை பாதுகாப்புத்துறை வசம் உள்ள ஆவணங்களிலேயே யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் நான் 2007ம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டேன். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தான் இந்த ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய விமானப் படை ஒப்பந்தம் செய்தது. இதனால் எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
18,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர் உலகிலேயே ஒன்றே ஒன்று தான். அதை நாம் வாங்கியிருக்கலாம். ஆனால், இந்த ஹெலிகாப்டர்கள் கருப்புப் பூனைப் படையின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறிவிட்டார் பிரிஜேஷ் மிஸ்ரா. இதனால் வேறு ஹெலிகாப்டரை வாங்குமாறு கூறினார். இதையடுத்தே 15,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர் இருந்தால் போதும் என்று டெண்டர் திருத்தப்பட்டது. இதற்கு என்னை எப்படி குற்றம் சொல்ல முடியும் என்றார் தியாகி.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகி ஆகியோர் என் உறவினர்கள் தான். ஆனால், அவர்களுடன் எனக்கு எந்தவிதமான தொழில்ரீதியிலான உறவுகளும் இல்லை. சந்தீப்பின் வீட்டில் ஒருமுறை கார்லே கெரோஸோவை (இவரும் இந்த விவகாரத்தில் இன்னொரு இடைத்தரகராக இருந்தவர்) சந்தித்துள்ளேன். அவ்வளவு தான். அதற்கு மேல் எனக்கு அவருடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்றார் தியாகி.
இந் நிலையில் இந்த ஹெலிகாப்டர்களை வாங்க ரூ. 3,546 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த டிசம்பர் வரை ரூ 1,300 கோடியை இந்தியா இத்தாலிய நிறுவனத்திடம் வழங்கி விட்டது. அந்த நிறுவனமும் 3 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையிடம் தந்துவிட்டது. இந் நிலையில் இந்த ஊழல் விவகாரம் வெடித்துள்ளதால், இந்த டீலை அப்படியே நிறுத்தி வைக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐயும் அமலாக்கப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications