கேரளா- கர்நாடகா எல்லைப் பகுதியில் காலூன்றும் மாவோயிஸ்டுகள்
கண்ணூர்: கேரள மாநிலத்தில் கர்நாடகா எல்லையோரத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை உறுதி செய்திருப்பதாக கண்ணூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனப்பகுதிகளில் அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்ணூர் போலீஸ் எஸ்.பி. ராகுல் நாயர் கூறுகையில், கேரள- கர்நாடகா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றார். மேலும் கண்ணூரில் கர்நாடகா எல்லை மற்றும் வயநாடு மாவட்டப் பகுதிகளுக்கும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து கேரளா- கர்நாடகா இரு மாநில போலீசாரும் இணைந்து எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவல்களின்படியே மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.