வீட்டில் கள்ளத் துப்பாக்கி தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் கைது
ஏர்வாடி: ஏர்வாடியில் வீட்டில் துப்பாக்கி தயாரித்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்ஸ் தலைமையில் போலீசார் ஏர்வாடி லெப்பை வளைவு வடக்கு தெருவை சேர்ந்த முகைதீன் பாஷா கான் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் வைத்து ஏர்கன் ரக துப்பாக்கி தயாரித்ததுடன் பழுது நீக்கி கொடுப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முகைதீன் பாஷாகானை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்த 3 துப்பாக்கிகள், இரண்டு துப்பாக்கி பட், துப்பாக்கி பேரல், 111 ஈய குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணை.யில் முகைதீன் பாஷா ராணுவத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக ஏர்வாடியில் வசித்து வருகிறார்.
வீட்டில் இருந்தவாறு ஏர்கன் ரக துப்பாக்கிகளை தயாரித்தல், பழுது நீக்குதல் மற்றும் துப்பாக்கிகளுக்கு உதிரி பாகங்கள் மாற்றி கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்த வள்ளியூரில் வெல்டிங் பட்டறை நடந்தி வரும் களக்காடு எஸ்என் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பரவீன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.