வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடுவதில் தவறே இல்லை... மாஜி அதிகாரி கோபாலகிருஷ்ணன்
சேலம்: 169 பேரின் கொடூர மரணங்களுக்குக் காரணமானவன் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும். பல நூறுயானைகளை கொன்று குவித்தவர்கள் வீரப்பன் கும்பல். இப்படிப்பட்ட கும்பலைச் சேர்ந்த 22 போலீஸாரின் உயிரிழப்புக்குக் காரணமான 4 கூட்டாளிகளை தூக்கில் போடுவதில் தவறே இல்லை என்று கூறியுள்ளார் பாலாறு கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தப்பிய முன்னாள் அதிரடிப்படைத் தலைவர் கோபாலகிருஷ்ணன்.
வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது குறித்து கோபாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சந்தன கடத்தல் வீரப்பனால் பல நூறு யானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டன. 400 டன் சந்தன மரங்களும் வெட்டி கடத்தப்பட்டன. அதோடு அவனை பிடிக்க சென்ற போலீசார், பொதுமக்கள் என 169 பேர் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட கொடூரமான தவறுகளை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதை மனித உரிமை ஆர்வலர்கள் எந்த வகையில் தவறு என்கின்றனர்.
நேருக்கு நேர் எங்களுடன் மோத முடியாது என்பதால் கண்ணி வெடியை வெடிக்க செய்தான். இதில் 22 பேர் கொல்லப்பட்டதோடு எனது இடது கால், கை, தாடை என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 9 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு விடுமுறைக்கு பிறகே பணியில் சேர்ந்தேன். அந்த வகையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு பெரும் உதவிகளைச்செய்தார்.
கண்ணிடி தாக்குதல் நடைபெற்றதும் சைமன், ஞானபிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேர்களும் வந்தனர். அவர்கள் நாங்கள் உயிரோடு இருக்கிறோமா என்று வந்து பார்த்த போது பலத்த காயங்களுடன் கிடந்த நான் அவர்களை கண்டு கொண்டேன்.
அதன் பின்னர் மைசூர் தடா கோர்ட்டில் அவர்கள் 4 பேரையும் அடையாளம் காட்டினேன். இதனை அடுத்தே அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் தூக்கிலிடப்பட இருப்பது எனக்கு சந்தோசத்தை அளிக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications