நெல்லை அருகே எரிந்த நிலையில் கிடந்த பெண், ஆண் உடல்கள்
நெல்லை: நெல்லை அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை சிவந்திபட்டியை அடுத்த ஆலங்குளம் கிராமத்தின் ஓடையில் நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் அடையாளம் தெரியாதவாறு முழுமையாக எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், மர்ம நபர்கள் கடத்தி வந்து கற்பழித்து கடைசியில் தீ வைத்து எரித்து கொன்றுவிட்டு தப்பினார்களா? என்பது குறித்து தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பணகுடி பை பாஸ் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கருகிய நிலையில் கண்டு எடுக்கபட்டுள்ளது. இது குறித்து பணகுடி போலீசார் நடத்திய விசாரணையில் எரிக்கபட்டு இறந்து கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிய வந்துள்ளது. அவரை யார், எதற்காக எரித்துக் கொன்றனர் என்று தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications