அடுத்தபடியாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுக்கு 'குறி' வைக்கும் அதிமுக
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை தம்மை சந்திக்க வைத்து தேமுதிக (ஜெ) அணியை உருவாக்கினார் முதல்வர் ஜெயலலிதா. அந்த அணியின் திட்டக்குடி தமிழழகன், சட்டசபையில் தம்மை புகழ்ந்து தள்ளியதை விழுந்து விழுந்து ரசித்தார் ஜெயலலிதா. அன்றைக்குத்தான் தேமுதிகவின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே அடிதடி அரங்கேறியது.
தற்போது சட்டசபையில் அடிவாங்கிய மைக்கேல் ராயப்பனுக்கு மிக நெருக்கமானவரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான அரவிந்தனை முன்வைத்து மாவட்டச் செயலாளர்களை வளைக்க அதிமுக திட்டமிட்டிருக்கிறது.
மைக்கேல் ராயப்பனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்கியதால் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்தன். இதை விஜயகாந்தும் ஏற்று மாவட்டப் பொருளாளராக இருந்த டி.சிவமுத்துக்குமாரை நியமித்தார்.
இந்த அரவிந்தனை வைத்து மேலும் சில மாவட்டச் செயலர்களை வளைப்பதில் அதிமுகவும் தேமுதிக (ஜெ) அணியும் மும்முரமாக இருக்கின்றனவாம்!