‘ஒன் பில்லியன் ரைசிங்!’: பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு

சுமார் 200 நாடுகளில் உள்ள 100 கோடி பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவுள்ளதை குறிக்கும் வகையில் "ஒன் பில்லியன் ரைசிங்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்ட தங்களது முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதிமொழி எடுக்க உள்ளனர்.
மகளிர் அமைப்புகள், கலைஞர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், சட்ட வல்லுனர்கள், திரைப்பட கலைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பார்லிமென்ட் ரோட்டில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி இந்த நிகழ்ச்சி வரை நடக்கிறது. டில்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மற்றும் கமலா நேரு கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நடன நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
சென்னையில் நிகழ்ச்சிகள்
சென்னை மெரினா கடற்கரையில் ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சியையொட்டி பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலாய்லாமா ஆதரவு
இந்த நிகழ்ச்சிக்கு திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா, பூடான் ராணி சங்கே சோடன் வாங்சக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தெற்காசியாவுக்கான "ஒன் பில்லியன் ரைசிங்" நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கமலா பாசின் கூறுகையில், "இந்திய சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை துவக்கியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications