10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு!
டெல்லி: அஜ்மல் கசாப், அப்சல் குரு, வீரப்பன் கூட்டாளிகள் என நீள்கிறது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற 7 மாதங்களில் 7 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை கருணை மனு கோருவோர் பற்றிய விவரங்களை வைத்திருந்த ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது அதை அடியோடு நீக்கியிருக்கிறது. அப்படியெனில் இந்த கருணை மனு விவகாரமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டாரோ ஜனாதிபதி எனத் தெரியவில்லை..
தொடர்ச்சியாக தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வருவதாலோ என்னவோ அவருக்கு "தூக்கு தூக்கி" என்ற பட்டத்தையும் சில அமைப்புகள் கொடுத்து விமர்சித்திருக்கின்றன. அரிதினும் அரிதாக வழக்குகளுக்கு தூக்கு தண்டனை என அரசியல் சட்டம் கூறினாலும் தற்போது 'அரசியல்' காரணங்களுக்காக 'செலக்ட்டிவ்' தூக்கு தண்டனையாக உருமாறியிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டிருக்கிறது.

கொலை வழக்குகள் எத்தனை?
கடந்த 2001-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடியே 80 லட்சம். அந்த ஆண்டில் மொத்தம் 36 ஆயிரத்து 202 கொலை வழக்குகள் பதிவாகின. 2011-ல் மக்கள் தொகை 121 கோடி. அப்போது 34 ஆயிரத்து 305 கொலை வழக்குகள் பதிவாகின.

1455 பேருக்கு தூக்கு
2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 1.455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

உ.பி.க்கு முதலிடம்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இம்மாநிலத்தில் மட்டும் 370 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

பீகாருக்கு 2 வது இடம்
தூக்கு விதிக்கப்பட்டதில் பீகார் மாநிலத்துக்கு 2- வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த மாநிலத்தில் 132 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 3வதாக மராட்டியத்தில் 125 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவும் தமிழகமும் ஓரணியில்..
காவிரி விவகாரத்தில் எதிரும் புதிருமாக அடித்துக் கொண்டிருக்கும் கர்நாடகாவும் தமிழகமும் தூக்கு விதிப்பதில் ஒரே இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் தலா 95 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

50 பேருக்கும் அதிகமான தூக்குகள்
மத்தியபிரதேசத்தில் 87 பேருக்கும், ஜார்கண்டில் 81 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 79 பேருக்கும், டெல்லியில் 71 பேருக்கும், குஜராத்தில் 57 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

50 பேருக்கும் குறைவான தூக்குகள்
ராஜஸ்தானில் 38 பேருக்கும், கேரளாவில் 34 பேருக்கும், அரியானாவில் 31 பேருக்கும், அசாமில் 21 பேருக்கும், காஷ்மீரில் 20 பேருக்கும், பஞ்சாபில் 19 பேருக்கும், சத்தீஷ்காரில் 18 பேருக்கும், உத்தராஞ்சலில் 16 பேருக்கும், அருணாசலபிரதேசத்தில் 8 பேருக்கும், மேகாலயாவில் 6 பேருக்கும், யூனியன் பிரதேசங்களான சண்டிகார், டாமன் மற்றும் டையூவில் 4 பேருக்கும், மணிப்பூர், இமாச்சலபிரதேசம் மாநிலங்களில் தலா 3 பேருக்கும், திரிபுரா, புதுச்சேரியில் தலா 2 பேருக்கும். கோவா மாநிலத்தில் ஒருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

தூக்கே இல்லாத மாநிலங்கள்
மிஜோராம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி மற்றும் லட்சத்தீவில் யாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.

ஆயுளாக குறைப்பு
இதே 10 ஆண்டுகளில் 4,321 பேரின் தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு இருக்கிறது என்கிறது ஆசிய மனித உரிமைகள் மையத்தின் அறிக்கை.












Click it and Unblock the Notifications