சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கு- தலைமறைவான தர்மராஜன் மைசூரில் கைது!
1996-ம் ஆண்டு சூரியநெல்லியில் சிறுமி ஒருவர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தர்மராஜன் என்பவருக்கு மட்டும் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் வந்த தர்மராஜன் அப்படியே தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் சூரியநெல்லியில் பலாத்காரத்துக்குள்ளான சிறுமி, தம்மை சீரழித்தவர்களில் ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜெ. குரியனும் ஒருவர் ஒன்று அண்மையில் தெரிவிக்க கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்றமும் சூரியநெல்லிய பலாத்கார வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதனால் குரியன் மீது நடவடிக்கை கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அப்போதுதான் தலைமறைவாக இருந்த தர்மராஜன், டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் குரியனும்தான் சிறுமியை சீரழித்தார் என்று போட்டுடைத்தார்.
இதைத் தொடர்ந்து தர்மராஜனை கேரள மாநில போலீசார் தேடத் தொடங்கினர். இதனால் கோட்டயம் நீதிமன்றத்தில் தர்மராஜன் சரணடையக் கூடும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலம் மைசூரில் பதுங்கியிருந்த தர்மராஜனை கேரள போலீசார் கைது செய்தனர்.
குரியன் ராஜினாமா?
இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் பி.ஜெ. குரியன், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் கொடுத்தார். இதனால் குரியன் பதவி விலகக் கூடும் என்று கூறப்படுகிறது.