இடிந்தகரையில் பரபரப்பு... பிரெஞ்சு தேசியக் கொடியை எரித்து அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம்
பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
பெரும் திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரையில் திரண்டு முதலில் பேரணி நடத்தினர். கூடங்குளம் அணு உலையை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் நடந்தது. பேரணியின் நிறைவில் பிரெஞ்சு தேசியக் கொடி தீவைத்து எரிக்கப்பட்டது.
இதுகுறித்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஜைதாப்ப்பூரில் அணு மின் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பிரான்ஸும் கையெழுத்திடவுள்ளன. இதற்காகவே ஹோலன்டே வருகிறார். இதைக் கண்டித்தே தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரான்ஸ் அதிபரான பின்னர் முதல் முறையாக ஹோலன்டே இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்ககது. 2 நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.