பொட்டு சுரேஷ் கொலை: 'அட்டாக்' அக்காள் மகன் விஜயபாண்டியின் பின்னணி….
ஒரு கொலையும் பல சந்தேகங்களும்
கடந்த 31ம் தேதி கொலையான பொட்டு சுரேஷ் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்று சந்தேகம் எழுந்த உடனே 'ஆவின்' மன்னன் உள்ளிட்ட முக்கியமான 5 பேரை பிடித்து விசாரனை நடத்தியது போலீஸ். அட்டாக் பாண்டிமீதுதான் அதிக அளவு சந்தேகம் வலுக்கவே அவரது கூட்டாளிகள் 7 பேர் சரணடைந்தனர். இவர்களை 6 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர் போலீசார். அவர்கள் விசாரித்த விதமும் அந்த ஏழு பேர் அளித்த வாக்குமூலமும் கொலை செய்யத் தூண்டியவர்களை அடையாளம் காட்டியிருக்கின்றன.
விஜயபாண்டிதான் மூலகாரணம்
சந்தானம் நீங்கலாக விசாரணை கைதிகள் 5 பேரும் சபாரத்தினத்தை கை காட்டியிருக்கிறார்கள். சபாரத்தினமும் சந்தானமும் அட்டாக் பாண்டியின் சார்பில் இந்தக் கொலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்தது விஜயபாண்டி தான் என்று கூறியிருக்கின்றனர். முக்கிய பிரமுகரின் மகனே இவருக்கு செம தோஸ்த் என்றும் சொல்கிறார்கள். விஜயபாண்டி மதுரை திருமலைநாயக்கர் மஹாலுக்கு எதிரில் தயா மியூசிகல்ஸ் என்ற பெயரில் சி.டி. கடை நடத்தினார். அருப்புக்கோட்டையிலும் சி.டி. வியாபாரம் செய்து வந்தாராம்.
காக்கிகளை தலை சுற்ற வைத்திருக்கிறது...
தனித்தனியாக விசாரித்த போது, இந்த விசாரணைக் கைதிகளில் ஓரிருவர் உண்மை பேசியிருக்கிறார்கள். செல்போனில் இவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் என்ற நீளமான பட்டியல் காக்கிகளை தலை சுற்ற வைத்திருக்கிறது. ஆனாலும், எந்தக் கட்டத்திலும் விஜயபாண்டியைத் தாண்டி எதுவும் கறக்க முடியவில்லை காக்கிகளால். பொட்டுவின் பினாமி என்று சொல்லப்படும் பாலதம்புராஜ் போன்றவர்களும் கூட விசாரணை வளையத்துக்குள் வந்து போயிருக்கிறார்கள்.
செல்போன் பேச்சில் சிக்கியவர்கள்
முதலில் சரணடைந்த ஏழு பேரும் பொட்டு கொலையான நாளில் செல்போன் மூலம் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என ‘ட்ரேஸ்' செய்த போது, சம்பந்தமில்லாத ஒரு நம்பருக்கு இவர்கள் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஜோதி மற்றும் பிரபுவின் செல் நம்பர்கள்தான் விஜய பாண்டியின் நம்பரோடு அடிக்கடி தொடர்பில் இருந்திருக்கின்றன. எனவே இந்த வழக்கில் அட்டாக் பாண்டி, விஜயபாண்டியோடு இன்னும் ஏழெட்டு பேரை இந்த வழக்குக்காக தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது காவல்துறை.
விஜயபாண்டியின் பின்னணி என்ன?
போலீசின் சந்தேகம் அழுத்தமாக விழுந்துள்ளதை அடுத்து நேற்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான் விஜயபாண்டி அவனுடன் ஆரோக்கிய பிரபுவும் சரணடைந்துள்ளான். அட்டாக் பாண்டியின் அக்காள் மகனான விஜயபாண்டியின் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம் - பரளச்சி அருகிலுள்ள கள்ளக்காரி. வசதியான குடும்பப் பின்னணி உள்ள விஜயபாண்டி ஒரு பட்டதாரியும் கூட.
துப்பாக்கி கடத்தல் வழக்கு
2010-ல் சென்னையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு வந்த ஆம்னி பஸ் மூலம் கள்ளத் துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள், புல்லட்கள் கடத்தியதாக அட்டாக் பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேறு இருவர் அப்போது கைது செய்யப்பட்டாலும் இந்தக் கடத்தலின் பின்னணியில் இருந்தது விஜயபாண்டிதான் என்கிறார்கள் போலீசார்.
அழகிரி தலைமையில் திருமணம்
சினிமா தயாரிப்பாளரும் டைரக்டர் மணிரத்னத்தின் அண்ணனுமான ஜி.வி தற்கொலைக்கு காரணமானவர் என்று பேசப்பட்ட சினிமா வினியோகஸ்தர் அன்புச் செழியனின் அண்ணன் மகளைத்தான் மணம் முடித்திருக்கிறார் விஜயபாண்டி. இந்தத் திருமணமும் மு.க. அழகிரியின் தலைமையில்தான் நடந்திருக்கிறது.
ரூம் போட்டு யோசித்த கொலையாளிகள்
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தங்கம் தியேட்டருக்கு அடுத்துள்ள தி கோல்டன் பார்க் என்ற லாட்ஜில் அறை எண்கள் 201 மற்றும் 202-ல்தான் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஜனவரி 12ம் தேதியும் 15ம் தேதியும் அறை புக் செய்யப்பட்டுள்ளது. மோகன்ராஜ், பிரபு என்ற பெயரில் போடப்பட்ட அறையில் 5 பேர் தங்கியதாக ஓட்டல் கணக்காளர் சுப்பையா கூறியுள்ளார். இரண்டு ரூமையும் 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மேலதான் காலி செய்திருக்கின்றனர். அன்று இரவு 7.40 மணிக்குதான் பொட்டு சுரேஷ் படுகொலை நடந்தது.
முக்கிய தலைகள் உருளும்
மதுரை கீரைத்துறை ஏரியாவில் தாங்கள் ஏவிவிடும் அம்புகளாக பலரை அட்டாக் பாண்டியின் குடும்பத்தினர் வளர்த்து விட்டிருக்கின்றனர். அட்டாக் பாண்டி நினைத்ததை முடிப்பவனாக இருக்கும் விஜயபாண்டியும் சரி.. அட்டாக் பாண்டியும் சரி.. கொலையைச் செய்துவிட்டு லாவகமாகத் தப்பி விடுவதில் கை தேர்ந்தவர்கள். இப்போது விஜயபாண்டி சரணடைந்துள்ளான். அவனை விசாரிக்கும் போது முக்கிய தலைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.