தாமிரபரணியில் மணல் கடத்தினால் குண்டாஸ்தான் - கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி: தாமிரபரணியில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், கருங்குளம், முத்தலாங்குறிச்சி, ஆழிக்குடி, பக்கப்பட்டி, முறப்பநாடு, சென்னல்பட்டி, கலியாயூர், கலாங்கரை, அகரம், அனந்தநம்பி குறிச்சி, மணக்கரை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடக்கிறது. மணல் திருடும் வாகனங்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாமல் போக அதிகாரிகள் பள்ளம் தோண்டினர். அதையும் தாண்டி மணல் கொள்ளை நடக்கிறது.
15 நாட்களுக்கு முன் மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஸ்ரீவைகுண்டம் முன்னாள் தாசில்தார் மாடசாமியை கொள்ளையர்கள் லாரியால் ஏற்றி கொல்ல முயன்றனர். அதே போல் முத்தலாங்குறிச்சி தலையாரி பாலகிருஷ்ணனையும் கொல்ல முயற்சி நடந்தது.
மூறப்பநாடு, செய்துங்கநல்லூர், காவல் நிலையங்களில் மணல் திருடிய ஏராளமான பைக், உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கலெக்டர் ஆசிஷ்குமார் அகரம் தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை தவிர வேறு எதற்கும் இங்கிருநது மணல் எடுக்க கூடாது. மீறி மணல் எடுப்போர் மீது குண்டர் சட்டம் பாயும். இதுவரை மணல் திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்டிஓ லதாவுக்கும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications