இவங்க பரம ஏழைகளாம்!... திருமண விழாவில் சூட்கேஸ், சீர்வரிசை பெற்ற அமைச்சர்களின் வாரிசுகள்!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 65 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மகள், மகன்களும் மணமக்களாய் பங்கேற்று இலவச சீர்வரிசை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் 65 வது பிறந்தநாளை ஒட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 65 பரம ஏழை ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. முதல்வர் ஜெயல்லிதா இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்தில் மணமகனுக்கு பட்டுவேட்டி, பட்டு சட்டை, மணமகளுக்கு பட்டுசேலை, ஜாக்கெட்வழங்கப்பட்டது. 65 ஜோடிகளுக்கும், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட சீர்வரிசைகள் திருமணம் முடிந்த பின்னர் வழங்கப்பட்டது.
இந்த 65 திருமண ஜோடிகளில், ஏழையான தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தின் மகள் அரூத்தி பிரியதர்ஷினி-என்.சிவக்குமார் திருமணத்தையும், பரம ஏழையான முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் ஆர். திவாகர் - காயத்ரி ஆகியோரின் திருமணத்தையும் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
இந்த ஜோடிகளுக்கும் பீரோ, கட்டில், தலையணை, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, குக்கர், சூட்கேஸ், ஜமுக்காளம், சமையலுக்கு தேவையான பொருட்கள் உட்பட மொத்தம் 65 வகையான சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
சீர்வரிசையில் கிடைக்கும் மின்விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவற்றுக்கு தேவையான மின்சாரம், வரும் ஜூன் மாதத்தில் இருந்து கிடைக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications