ஒரு காதலி... 2 காதலர்கள்.. காதலர் தினத்தில் சென்னையில் ஒரு அடிதடி!
சென்னை: காதலர் தினத்தை நேற்று உலகம் பூராவும் காதலர்கள் ஜோராக கொண்டாடிய நிலையில், சென்னையில் ஒரு பெண் தனது இரு காதலர்களுக்கும் அனுப்பிய வாழ்த்து செய்திகளால் பெரிய அடிதடியாகி விட்டது. ஓடும் ரயிலில் நடந்த இந்தக் கூத்தால் ரயிலையே நிறுத்த வேண்டியதாகி விட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினசரி வந்து செல்வது ஏலகிரி எக்ஸ்பிரஸ். ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, வாலாஜா, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூர் உட்பட 15க்கும் அதிகமான ரயில்நிலையங்களில் நின்றுச் செல்லும்.
வேலை, படிப்பு, தொழில் என சென்னைக்கு தினமும் வந்து செல்ல வசதியான ரயில் என்பதால் எப்போதும் நெரிசலாக இருக்கும். இந்த ரயில் நேற்று காலை அரக்கோணத்தில் நின்று புறப்பட்டது.
அதில் ஒரு பெட்டியில், அரக்கோணம் பழனிப்பேட்டையை ராஜன், ரவி என இரு நண்பர்கள் பயணித்தனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாம். ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ராஜன், ரவியிடம் எனது காதலி காதலர் தின வாழ்த்து அனுப்பியுள்ளார் பாரேன் என்று கூறி தனக்கு காதலியிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்ஸைக் காட்டியுள்ளார்.
அதை வாங்கிப் பார்த்தார் ரவி. பார்த்தவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. முகம் இறுகியது. கோபக் குரலில் ராஜனைப் பார்த்து, இவ எதுக்கு உனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கா என்று கேட்டார். அதற்கு ரவி, என்னோட காதலி எனக்கு அனுப்பாம உனக்கா அனுப்புவா என்று நக்கலாக கேட்டார். இதைக் கேட்டு மேலும் கோபமடைந்தார் ராஜன். இவ என்னோட காதலி, என்னைத்தான் காதலிக்கிறா. எனக்கும் மெசேஜ் அனுப்பியிருக்கா என்று சொல்ல இருவரும் வாக்குவாதத்தால் மூண்டனர்.
அதன் பிறகு சண்டை தொடங்கியது. கட்டி உருண்டனர். அடித்துக் கொண்டனர். ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சண்டை மோசமாகவே சிலர் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். ரயில் கொசஸ்தலை ஆற்றுப் பாலத்தின் மீது நின்றது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதான்பபடுத்திப் பார்த்தனர். முடியவில்லை. அவ எப்படி உனக்கு அனுப்பலாம் என்று இவரும், எனக்கு அனுப்பினா உனக்கென்ன என்று அவரும் பேசியபடி இருந்தனர். இந்த நிலையில் ரயில்வே போலீஸாரும், கார்டும் அங்கு வந்தனர். ரயில் நின்றதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் கடுப்பாகி விட்டனர்.
ராஜனையும், ரவியையும் கூப்பிட்டு கடுமையாக கண்டித்து எச்சரித்தனர். இதையடுத்து இருவரும் அமைதியானார்கள். பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.
இந்த சண்டையில் இரு காதலர்களுக்கும் ஒரே சமயத்தில் மெசேஜ் அனுப்பி அவர்களை விளையாட விட்ட காதலி யார் என்பது தெரியாமலேயே போய் விட்டது... இதுதான் பெட்டியில் பயணித்த மற்றவர்களின் பெரிய கவலையாக இருந்தது.












Click it and Unblock the Notifications