அப்சல் குருவை தூக்கிலிட்டதில் என்ன தப்பு?: மாலன்

மாலன் நாராயணன் என்ற முழுப்பெயருடன் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மாலன் கடந்த வாரம் பதிவிட்டிருந்தது இது:
அன்று அலுவலகத்திற்குப் போன சில நிமிடங்களில் நாடாளுமன்றம் தாக்கப்படுவதாக செய்தி வந்தது. அவசர அவசரமாக அரங்கில் நுழைந்து அதன் காட்சிகளை நான் நேரலையில் வழங்க ஆரம்பித்தேன். முயற்சி எடுத்து நாடாளுமன்றத்திற்குள் இருந்த சில எம்.பிகளை செல்போனில் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்ற தகவல்களையும் அவர்கள் குரலிலேயே ஒளிபரப்பினேன். முதலில் திருச்சி சிவா பேசினார். என் தொலைக்காட்சிப் பணியில் அந்த டிசம்பர் 11 (2001) மறக்க முடியாத நாள். ஆயுதம் தாங்கிய ஐவர் குழு அந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. அதில் ஒருவர் மனித வெடிகுண்டாக வந்திருந்தார். சம்பவம் நடை பெற்ற போது நாடாளுமன்ற வளாகத்தில் பல முக்கிய தலைவர்கள் (துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், அத்வானி போன்றோர்) இருந்தார்கள். தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் தலைவர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள். அப்படி ஒரு துன்பியல் சம்பவம் நடைபெறாமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் செயல் பட்ட நம் மத்திய பாதுகாப்புப் படைக்கு நன்றி செலுத்த வேண்டும்
ஆனால் அவர்களில் சிலர் இதற்காகத் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்தார்கள் அந்த சம்பவத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர், ஒரு தோட்டக்காரர் இறந்து போனார்கள். இன்று அப்சல் குருவின் தண்டனையை கண்டிப்பவர்கள் அந்த அப்பாவிக் காவலர்களுக்கும், அந்தத் தோட்டக்காரர் குடும்பத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
நாடாளுமன்றத்தைத் தாக்கியது ஜெய்ஷ் -எ-முகமது என்ற பயங்கரவாதக் குழு. பாகிஸ்தான் இதன் பின்னிருந்து செயல்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம். இந்தச் சம்பவத்தையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவு முறுக்கேறிய நிலையில் இருந்தது.
வழக்கின் போது அரசுத் தரப்பில் 80 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 10 பேர் சாட்சியம் அளித்தார்கள். கீழமை நீதி மன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை குற்றவாளிகள் வழக்காடினார்கள். உச்ச நீதி மன்றம் வரை மேல் முறையீடு நடந்தது. பின் குடியரசுத் தலைவரிடமும் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆறாண்டுகளுக்குப் பிறகு- சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு- தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், குருவையும் சேர்த்து இரண்டு பேர்தான் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற சம்பவங்கள், இந்தியாவில் தூக்கு தண்டனைக்கான அவசியத்தை நினைவூட்டுகின்றன என்று பதிவிட்டுள்ளார் மாலன்.
மேலும் அப்சல் குரு மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது தொடர்பாகவும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications