பாலியல் புகார்: இந்திய பேஷன் டிசைனருக்கு 59 ஆண்டுகள் சிறைத்தண்டனை... அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது.
பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர். இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்களின் பேரில், கலிபோர்னியா சிறையில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஜான் மீது, மான்ஹாட்டன் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று நடந்த விசாரணையின்போது தன் மீதான குற்றங்களில் ஒன்றை ஆனந்த் ஜான் ஓப்புக்கொண்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஆனந்த் ஜான் கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனந்த் ஜானுக்கு ஏற்கனவே 59 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நிலையில், டெக்சஸ், நியூயார்க்கிலும் அவர் மீதான குற்றங்களின் பேரில் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.