காதலியை பலமுறை தாக்கியவர் பிஸ்டோரியஸ் - தெ.ஆப்பிரிக்க போலீஸ்
எனவே பிஸ்டோரியஸ் திட்டமிட்டே தனது காதலியைக் கொன்றுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை 3 முறை சுட்டுள்ளார். தலை உள்ளிட்ட இடங்களில் அவர் சுட்டுள்ளார். இதற்கு அவர் 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.
பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் ரீவாவை பிஸ்டோரியஸ் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பிஸ்டோரியஸ் வீட்டில் தகராறு, துப்பாக்கிச் சூடு என்று தகவல் கிடைத்ததுமே போலீஸாருக்கு பெரும் வியப்புஏற்படவில்லையாம். காரணம்,பலமுறை அங்கு அவர்கள் அதற்கு முன்பு வந்துள்ளனராம். பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலி ரீவாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் மூளுமாம். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து விலக்கி விடுவார்களாம். ஆனால் இந்த முறை அது கொலையில் போய் முடிந்ததுதான் போலீஸாருக்குப் புதிய செய்தியாக இருந்தது.
தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார் ரீவா. காதலர் தினத்தையொட்டி பிஸ்டோரியஸுக்கும், ரீவாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு அது துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கலாம் என்பது போலீஸாரின் சந்தேகமாகும்.
போலீஸாரிடம் திருடன் வந்து விட்டதாக கருதித்தான் சுட்டதாக கூறினார் பிஸ்டோரியஸ். போலீஸாரும் முதலில்அதை நம்பினர். தென் ஆப்பிரிக்காவில் கொள்ளையும், கொலையும் வெகு சாதாரண விஷயம். எனவே தற்காப்புக்காக அங்கு சுடுவதும் சகஜமானதுதான். எனவே பிஸ்டோரியஸ் சொன்னதையும் போலீஸார் முதலில் நம்பவே செய்தனர். ஆனால் அவரது காதலியை அவர் சுட்டுக் கொன்றதுதான் போலீஸாரை சந்தேகப்பார்வை பட வைத்தது.
தற்போது பிஸ்டோரியஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிஸ்டோரியஸ் ஒத்துழைப்பு கொடுத்ததாக போலீஸ்தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிஸ்டோரியஸ். இன்று கோர்ட்டில்ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவத்தன்று இரவு பிஸ்டோரரியஸின் காதலி வீட்டுக்கு வந்துள்ளார். இதை பலரும் பார்த்துள்ளனர். சிசிடிவி கேமராவிலும் இது பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த சத்தத்தையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.
அதன் பிறகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே திருடன் வந்து விட்டதாக கருதி துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று போலீஸாரும், அக்கம்பக்கத்தினரும் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
தற்போது பிஸ்டோரியஸின் விளையாட்டு வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ஸ்பான்சர்கள் தற்போது பிஸ்டோரியஸின் படங்களை விளம்பர போர்டுகளிலிருந்து அகற்றி வருகின்றனர். அவர் இடம் பெற்ற டிவி விளம்பரங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.