காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு! பனிப் புயல் எச்சரிக்கை!! ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலை மூடல்!!!

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா டவுன், குல்மார்க் ரிசார்ட் ஆகிய இடங்களிலும், தெற்கு காஷ்மீரின் பஹல்கம் பகுதியும், கடும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராம்பன் மாவட்டத்தில் தொடர் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் செரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக, 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் இந்த நெடுஞ்சாலைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குலுமணாலியில் மகிழ்ச்சி
இதனிடையே ஹிமாச்சலபிரதேச மாநிலம் குலு மணாலியில் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு பனிப்பொழி மகிழ்ச்சியளித்துள்ளது.அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான பனிப்பொழிவால், வீதிகள், சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் கொட்டிக்கிடக்கின்றன. சுமார் 2 அடி உயரத்திற்கு பனித்துகள்கள் சாலைகளில் கொட்டிக் கிடக்கிப்பதால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .
கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் வெள்ளிப் பனி படர்ந்துள்ள காட்சிகளை கண்ட குதூகலத்தில் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் விசிறியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications