மழைச் சாரல் வரவேற்க மதுவிலக்கு நடைபயணம் தொடங்கினார் வைகோ
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இரண்டாம் கட்ட நடைபயணத்தை வைகோ இன்று தொடங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் கடற்கரை கிராமத்தில் நடைபயணம் தொடங்கியது. தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி முன்னணி தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஹைதர் அலி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் நடைபயணத்தை வாழ்த்திப் பேசினார்கள்..

உலகத்தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நடைபயண பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தமீம் அன்சாரி தர்கா-வில் இஸ்லாமிய பெரியவர்கள் வாழ்த்துகளோடு கொட்டும் மழையில் தனது நடைபயணத்தை தொடங்கினார் வைகோ.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய வைகோ, இளைஞர்களை திசை திருப்புவது மதுதான் அவர்களில் லட்சியப் பாதையில் செல்லவிடாமல் மது தடுக்கிறது என்றார். அதிகமாக சாலை விபத்துக்கள் நடப்பதற்கு மதுதான் காரணம். அடுத்த தலைமுறை சீரழிவுக்கு காரணமாகிறது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்க மதுதான் காரணம் இதை அறவே ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுவை முற்றிலும் ஒழிக்கும் வரை போராடுவேன் என்றார்.
திருப்போரூர் பொதுக்கூட்டம்
கேளம்பாக்கம் வழியாக இன்று இரவு திருப்போரூர் சென்றடையும் வைகோ அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.. தொடர்ந்து நாளை மாமல்லபுரத்தில் பேசுகிறார்.. 28-ம் தேதி மறைமலை நகரில் நடைபயணம் நிறைவடைகிறது.
நிகழ்ச்சியில் பொருளாளர் மாசிலாமணி, துணை பொது செயலாளர் மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேச முர்த்தி மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், சு.ஜீவன், எஸ்.ஜோயல், டி ஆர் ஆர் செங்கூட்டுவன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications