புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்கியது சரிதான்- பசுமை தீர்ப்பாயம்

இந்தத் தீர்ப்பை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி, மருத்துவ மனையின் ஒரு பிரிவு செயல்பட துவங்கியது. எனவே, மருத்துவமனையின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் வீரமணி என்பவர், கடந்த, 5ம் தேதி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்சில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாய பெஞ்ச், கடந்த, 6ம் தேதி, மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தது. அதன் பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கடந்த, 15ம் தேதி வரை, தினமும் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு, இன்று காலை, 11:00 மணிக்கு வழங்கப்படும் என, தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச், நேற்று அறிவித்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது சரியான நடவடிக்கைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜெயலலிதா மகிழ்ச்சி
இந்தத் தீர்ப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பன்னோக்கு மருத்துவ மனை செயல்படுவதற்கு தடை இல்லை என மத்திய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கிலும் தமிழக அரசிற்கு வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த புதிய கட்டிடத்தில் மருத்துவ மனை செயல்பட ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல் பன்னோக்கு மருத்துவமனை அந்த வளாகத்தில் செயல்படத் தொடங்கும்.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட தகவலும் பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பும் தமிழக அரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும் என்றார்.












Click it and Unblock the Notifications