இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கும்: ஜி.கே.வாசன்

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு சென்ற வாசன் அங்கு, மறைந்த காந்தியின் சீடர் ஜெகநாதனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜெகநாதனின் மனைவி கிருஷ்ணம்மாள், மகன் டாக்டர் பூமிகுமார், டாக்டர் சத்யா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை பற்றியும், தண்ணீர் இல்லாததால் ஏற்படும் அவல நிலை குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசிடம் மீண்டும் தெரிவிப்போம். காவிரி நதி நீர் பங்கீட்டில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக மாநில அரசு மதித்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்களர்களை போலவே இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடி அமர்த்த வேண்டும். தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தில், அதற்கு எதிராக மத்திய அரசு வாக்களித்தது போல ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும், தமிழர்களின் நலன் கருதி அதை ஆதரித்து வாக்களிக்க இந்தியா தயங்காது.
மத்திய அரசை பொறுத்த வரையில், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசை தட்டிக் கேட்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ராஜபக்சே இந்தியா வருவது என்பது தனிப்பட்ட விஷயம். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான், அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வரவேற்கவில்லை.
கூடங்குளம் அணு உலை என்பது மத்திய அரசின் சாதனைப் பணி ஆகும். அணு உலையில் துரதிஷ்டவசமாக சிறு கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச்-ஏப்ரல் மாத காலத்தில் இருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அணு உலையில் இருந்து தமிழகத்துக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்க வலியுறுத்துவோம்.
பால் விலை, மின்சார கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவதை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications