2 நாள் பந்த்: காலியான ஏடிஎம், பரிதவித்த மக்கள்
டெல்லி: தொழிற்சங்களின் 2 நாள் வேலைநிறுத்தத்தால் பல்வேறு இடங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் நேற்றும், இன்றும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. மும்பையில் பல்வேறு இடங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை. மேலும் ராஜஸ்தானில் 1,500 ஏடிஎம்களில் சுத்தமாக பணமே இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் முற்றிலும் ஓடவில்லை, ஆட்டோ, டாக்ஸியும் ஓடாததால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இந்த வேலைநிறுத்ததால் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூரில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடின. கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கிகள் செயல்படவில்லை.
தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் ஓடின, கடைகள் திறந்து வைக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்தில் பாதிப்பில்லை. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அரசு பேருந்துகள் எதுவுமே ஓடாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
பீகாரில் ஆரா மற்றும் ஜெஹனாபாத்தில் ரயில்கள் மறிக்கப்பட்டன. டெல்லியில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தத்தால் மேற்கு வங்கத்தில் வங்கிகள், கம்பெனிகள், பேக்டரிகள் பாதிக்கப்பட்டன. இன்று கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டுகள் திறந்து வைக்கப்பட்டன. பஞ்சாபில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படவில்லை. ஆனால் வங்கிகள் செயல்படவில்லை.
வேலை நிறுத்தத்தையொட்டி நொய்டாவில் நேற்று கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் 70 பேரை கைது செய்தனர். மேலும் 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். கலவரக்காரர்கள் பொது சொத்தை சேதப்படுத்தியதுடன், பள்ளி, கல்லூரிகளை தாக்கினர். அவர்கள் பேக்டரிகளை தாக்கியதுடன் கார்களை எரித்தனர். டெல்லியில் பேருந்துகள் ஓடினாலும் ஆட்டோக்கள் இல்லாததால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்கள் அனைவருமே நேற்று வேலைக்கு வந்ததாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications