கடலாடி அருகே பள்ளிக்கு லேட்டாக வந்த ஆசிரியையை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் கைது
ராமநாதபுரம்: கடலாடி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக ஆசிரியையை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது நரசிங்க கூட்டம் ஒன்றிய துவக்கப் பள்ளி. அங்கு ஆசிரியையாக பணிபுரிபவர் முருகேஸ்வரி. அவர் பள்ளிக்கு தாமதமாக வருகிறார் என்று கூறி அவரை தலைமை ஆசிரியர் பாலன்(38) திட்டியுள்ளார்.
உடனே முருகேஸ்வரி இது குறித்து தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது கணவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் முருகேஸ்வரி நேற்றும் பள்ளிக்கு தாமதமாகவே சென்றுள்ளார். அப்போது பாலன் அவரை திட்டியுள்ளார். தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாலன் தன்னை செருப்பால் அடித்ததாக முருகேஸ்வரி கடலாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.