நாகாலாந்து, மேகாலயாவில் சட்டசபை தேர்தல்- விறுவிறு வாக்குப் பதிவு
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டசபைகளின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து திரிபுராவில் கடந்த 14-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
நாகலாந்து மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 37 சுயேச்சைகள் உள்பட 188 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இம்மாநிலத்தில் ஆளும் கட்சியான நாகா மக்கள் முன்னணிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாகா மக்கள் முன்னணி 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு 345 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப் பதிவையொட்டி வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா- வங்கதேச சர்வதேச எல்லையிலும், மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.