பொட்டு சுரேஷ் கொலையில் மேலும் 5 பேர் கைது... எண்கவுண்டர் பயத்தில் ‘அட்டாக்’ பாண்டி

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நண்பரான பொட்டு சுரேஷ் கடந்த திமுக ஆட்சிகாலத்தில் மதுரையில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர். இவர் கடந்த 31ம் தேதி அவரது வீட்டின் அருகிலேயே மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் சந்தானம் உள்ளிட்ட 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, அவனது நண்பன் ஆரோக்கிய பிரபு ஆகியோரின் பெயரை கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களையும் கஸ்டடி எடுத்து விசாரித்த போலீ1 முக்கிய தகவல்களை கறந்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அட்டாக் பாண்டி எங்கிருக்கிறார் என்பது பற்றி மட்டும் வாய் திறக்கவில்லையாம்.
மனைவியிடம் விசாரணை
அட்டாக் பாண்டியை குறிவைத்திருக்கும் போலீஸ் அவரது மனைவி தயாளுவை ஒன்றரை வயது குழந்தை சங்கமித்திரையுடன் கடந்த 11ம் தேதி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனராம். எட்டு நாட்கள் போலீஸ்டேசனில் வைத்து விசாரித்தும் வாயே திறக்கவில்லையாம். தன் கணவரை என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே இருக்கிறாராம் அட்டாக் பாண்டியின் மனைவி. அரசியல் சதியில் தன்னுடைய கணவர் சிக்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி வருகிறார்.
துரை தயாநிதியிடம் விசாரணை
இதனிடையே பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக அழகிரியின் மகன் துரை தயாநிதி, மருமகன் வெங்கடேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பொட்டு
சுரேஷ் கொலைக்கு முன்பாக சென்னையில் இந்த இருவரும் அட்டாக் பாண்டியை சந்தித்து பேசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
5 பேர் கைது
இந்த நிலையில் சுரேஷ் கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியின் முன்னாள் வாகன ஓட்டுநர் சிற்பி சரவணன், மதுரையைச் சேர்ந்த பிரேம் குமார், ஜோதி வேலன், முத்து பாண்டி, பாண்டிய ராஜன், ஆகிய ஐந்து பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள 6 தனிப்படைகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications