குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமியாருக்கு துப்பாக்கிச் சூடு- மருமகனுக்கு போலீஸ் வலை
திருவண்ணமலை: கலசபாக்கம் அருகே மாமியாரை துப்பாக்கியால் சுட்ட மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த காங்கயனூரைச் சேர்ந்தவர்கள் மாயகிருஷ்ணன் - ராணி தம்பதியினர். இவர்களுக்கு 8 மகள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகள் மலரை போளூர் அருகே எடப்பிறையைச் சேர்ந்த நாகப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மலருக்கும் நாகப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அவ்வப்போது மனைவி மலரை நாகப்பன் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருவாராம். அண்மையிலும் இதேபோல் தகராறு ஏற்பட தாய் வீட்டுக்குப் போயிருக்கிறார் மலர். வழக்கம் போல நாகப்பனும் மாமியார் வீட்டுக்குப் போய் மனைவி மலரை அழைத்திருக்கிறார்.
ஆனால் இம்முறை மலர் வர மறுத்திருக்கிறார். இதனால் மலரின் தாய் ராணிக்கும் நாகப்பனுக்கும் இடையே தகராறு வெடித்திருக்கிறது. பின்னர் தாம் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாமியார் ராணியை சுட்டுவிட்டு நாகப்பன் தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நாகப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications