தமிழர்களின் உரிமைக்கு போராடும் முதல்வருக்கு துணை நிற்போம்… பழநெடுமாறன்
தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை என்று மக்கள் உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகள விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறோம்.
இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது, தமிழக மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும்; எனவே, இலங்கை வீரர்கள் இப்போட்டிகளில் பங்கு பெறக்கூடாது என ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருந்தும், எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார்.
அண்மை காலமாக தமிழக உரிமைகளை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் செயல்படுகிற முதல்வர் ஜெயலலிதாவிற்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது நீங்காத கடமையாகும் என்றும் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.