புதுவையில் இலங்கை தேசிய கொடி எரிப்பு- தந்தை பெரியார் தி.க.வினர் 100 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் இலங்கை தேசியக் கொடியை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை கைது செய்து சுட்டுக் கொலை செய்ததைக் கண்டித்து புதுவையில் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை பெரியார் திராவிடர் கழகத்தினர் தலைவர் வீரமோகன் தலைமையில் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே ஒன்று கூடினார்கள். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இலங்கை தேசியக்கொடியையும், ராஜபக்சே உருவ பொம்மையையும் எரித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே பாலச்சந்திரன் படுகொலைக்கு நியாயம் கோரி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நாளை முற்றுகையிடப் போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது.